ஊழியம் செய்யலாமா?
உலகத்தின் மக்கள்
தங்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடுகின்றனர். தங்களுடைய பொழுது போக்காக பலவற்றைக் கைக்கொண்டு
அவற்றிலே திருப்தியடைகின்றனர். ஆயினும் தேவனுடைய பிள்ளைகளான நாம் தேவனுக்கேற்றவர்களாக
ஜீவிப்பது அவசியம். அவ்விதமான ஜீவியமானது வெறுமனே உல்லாசமாய் அமைந்துவிடப்போவதில்லை.
தேவனுக்கேற்ற வாழ்வானது ஜீவியத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளும் ஒன்றாக இல்லாததினால் அநேகர்
தேவனுக்கேற்ற வாழ்வை நடத்தாது உலகம் தரும் சந்தோஷங்களை அடைவதற்கு உலக வாழ்க்கை வாழ
முயற்சிக்கின்றனர். உலகத்தின் ஆசைகள் வாழ்வில் முட்டுக்கட்டையாகவும் கிறிஸ்துவுக்கு
எதிராக பணிபுரியாது இருக்கவும் முட்டுக்கட்டையாக உள்ளதா? தொடருங்கள்..
அனேகருடைய எண்ணங்கள்
தேவனுக்கு பிரியமான ஊழியம் செய்யவேண்டும் என்பதை குறித்து உள்ளது. ஆனால் அநேகர் தாம்
தேவனுக்கு எவ்விதமான காரியத்தை செய்வது என அறியாது உள்ளனர். அவர்கள் தேவனுக்கு ஏற்ற
காரியத்தை செய்யும்படிக்கு தங்களை ஆயத்தம் செய்யும்படிக்கு தேவனை நோக்கிப் பார்க்க
வேண்டும். முதலில் தேவனுடைய பணியானது உலகிற்குரியதல்ல. உலகம் செய்கிற பிரகாரம் தேவனுக்கு
ஊழியம் செய்திட முடியாது. உலக மதங்கள் செய்கிற பிரகாரமாக அவருக்கு ஊழியம் செய்திட அழைக்கவில்லை.
மாறாக அவருடைய பரலோக இராஜ்ஜியத்தை கட்டும்படியாகவே எங்களை ஊழியம் செய்ய அழைக்கின்றார்.
ஏனெனில் தேவனுடைய இராஜ்யமானது பரலோகத்தை நோக்காகக் கொண்டமைந்துள்ளது. அது இழந்து போகின்ற
ஆத்துமாக்களை இரட்சிக்கும் ஊழியப்பணியாக அமைந்துள்ளது. அடுத்து அவர் தம்முடைய பணிக்கு
ஊழியர்களை அழைத்துக் கொண்டு இருக்கின்றார். நாம் அதனை தட்டிக்கழிப்பவர்களாக இருந்து
விட முடியாது. அவருடைய அறுவடையிலே நாங்கள் பங்குபெறும் பொருட்டு எங்களை அழைக்கின்றார்.
அவருடைய பணியில் ஈடுபடுவதானது அவருடனே கூட இருப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்
தருகின்றது. மிகப்பெரிய அறுவடைக்கு இன்னும் பலர் தேவைப்படுகின்றனர். அவருடைய பணியில்
இணைந்து கொள்ள இன்னும் அநேகமநேகம் பேர் அவருக்குத் தேவை. அவருக்கென ஊழியம் செய்ய இன்னும
பலர் வேண்டப்படுகின்றனர் என்பதை அறிவாயோ? அடுத்து தேவனுடைய பணியானது உலக ஆதாயங்களை நோக்கமாகக்
கொண்டதல்ல. அது பரலோகத்தின் ஐசுவரியங்களை நமக்குத் தரும் ஒன்றாக அமைந்துள்ளது.
கர்த்தருடைய ஊழியமானது
இலகுவானதல்ல. உபத்திரவம் நிறைந்தது. ஓவ்வொரு ஊழியப்பாதையும் சோதனைக்கான பாதையாக அமைகின்றது.
அது உள்ளத்திற்கும் உடலிற்கும் மிகவும் சோர்வை உண்டுபண்ணி ஊழியப்பாதையினின்று எம்மை
வழிவிலக செய்திடும். ஆயினும் அதிலே நிலைத்திருக்கும் போது எல்லா உபத்திரவங்களையும்
தள்ளிவிட்டு இயேசுவுக்காக ஓடும் போது நாம் வெற்றியடைய முடியும். தேவன் எல்லாவித வேதனைகளினையும்
தம்முடைய வருகையின் போது நீக்கிப் போடுவார். ஏனெனில் இயேசுவின் நிமித்தம் உலகம் அவரை
பகைத்தது போல இயேசுவின் பணியாட்களையும் உலகம் பகைக்கும் என வேதாகமத்தில் இயேசு கூறிய
காரியங்களைக் காணலாம். ஆனாலும் உயிர்த்த கிறிஸ்துவின் கிருபை நிலைத்திருக்கும். தேவனுக்காக
ஊழியம் செய்வதானது உலகப்பிரகாரமாக முட்டாள்தனமானதாக கணிக்கப்படும். ஆனால் தேவனுடைய
இராஜ்ஜியத்தில் மேன்மையான பணியாகும். ஏனெனில் தேவனுடைய ஊழிய ஞானமானது ஞானிகளுக்கு கொடுக்கப்படாமல்
பாலகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என இயேசுக்கிறிஸ்து கூறியுள்ளார். அவருடைய சீடர்கள்
ஊழியம் செய்து பலத்த அற்புதங்களைக் கண்டு அதை இயேசுவுக்கு கூறும் போது இயேசு அவ்வாறே
கூறினார். அடுத்து ஊதியத்திற்காக தேவனுடைய ஊழியத்தை செய்திட முடியாது. எனினும் இயேசுவானவர்
ஊழியத்திற்கான பரிசை தம்முடைய இராச்சியத்தில் அளிப்பார். பரலோகத்தில் அதற்கான வெகுமதியை
நாம் பெற்றுக்கொள்ள முடியும். தேவனுடைய இராச்சியம் புசிப்பும் குடிப்புமல்ல. அங்கு
தேவனுடைய பணிக்காக எமது தியாகங்கள், செலவீனங்கள் பெற்றுத் தரப்படும்.
எவ்விதமான ஊழியத்தை
நாம் அவருக்காக செய்வது? இது உண்மையில் மிகவும் அற்புதமானது. தேவனுக்காக
இதைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயமான சில கட்டளைகள் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டபோதிலும்
அதற்கான முறைகள் வேறுபட்டவையாக நாம் தெரிந்து எடுத்துக்கொள்ள முடிகின்றது. அதற்கான
வழிமுறைகள் ஏலவே எங்களுக்கு பெற்றுத் தரப்பட்டிருக்கும். அவை எங்கள் தாலந்துகளாகும்.
எங்களுடைய தாலந்துகளை நாம் தேவனுக்காக உபயோகிப்பதே அவருக்காக நாங்கள் செய்கின்ற செய்யத்தகுந்த
பணியாக உள்ளது. தேவனுக்காக எங்கள் தாலந்து உபயோகிக்கப்படுமாயின் அதுவே தேவனுக்கு செய்யும்
ஊழியமாகும். சிலவேளை ஐந்து தாலந்துகள் இருக்கலாம். குறைந்தது ஒரு தாலந்தையாவது இறைவன்
ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கின்றார் எனலாம். அவ்வித தாலந்து திறமைகளை தேவனுக்காக
பயன்படுத்தும் போது தேவன் அப்போதே அதற்குரிய பலனைத் தருவார். அதன்மூலமாக தொடர்ந்து
மேலும் மேலும் தாலந்துகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஓவ்வொரு தாலந்தும் பாவிக்கப்படும்
போது பெறுமதியானதாகவும் இன்னொரு தாலந்தை ஈட்டித்தரக்கூடியதாகவும் அமைகின்றது. இது எம்மால்
பாவிக்கப்பட வேண்டியதாக அமைகின்றது. தாலந்து என்று குறிப்பாக கூற முடியாத போதும் சிலருக்கு
உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களும் தாலந்தாக உள்ளது. சிலருக்கு தங்களுடைய உடலின் மூலமாக
வெளிப்படுத்தக்கூடிய செயல்கள் தாலந்துகளாய் உள்ளது. இன்னும் அநேக கண்களுக்கு தெரியாத
தாலந்துகள் காணப்படலாம். இவைகளெல்லாம் தேவனுக்காக ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம்
என்னும் உண்மையும் கற்றுத் தரப்படுகின்றது.
1 கொரிந்தியர் 7:17
தேவன்
அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே
அவனவன் நடக்கக்கடவன்.


Syndication
No Comment for this post yet...