எதிர்காலம்
சுதந்திரமான எதிர்காலத்தை பெற்றிட துடித்திட்ட பலரும் சுதந்திரமாக இன்று மண்ணுக்குள் உழல்கின்றனர் என்பதை கடந்த காலம் ஒருவாறு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஞாபகங்களின் மீதியாக ஒன்று சேர்ந்த நட்புறவை நோக்கிக் கொண்டிருக்கின்ற மனதிற்கு மேலும் ஒருவகையில் எதிர்காலம் எதனை ஏற்படுத்தப் போகின்றது என்பதை கேள்விக்குறியாக எழுப்பவேண்டியுள்ளது. கடந்தவை கடந்துவிட்ட போதும் மாறாத நினைவுகள் தினமும் பூப்பூப்பதை யாரால் தடுத்து விட முடியும். அவை தினமும் மலரும் மலராக மாலையில் உதிர்ந்தும் விடுகின்றன. எனினும் நம்பிக்கை எனும் செல்வமிருந்தால் நிச்சயம் எதிர்காலம் துளிர்விடும்.
சமுதாயத்தில் ஏற்படும் இன்னல்கள் பெரும்பாலும் சமூக வளர்ச்சிக்கு தடைக்கற்களாக உருவாகிக்கொண்டு இருப்பினும் அவற்றை தூக்கியெறியும் பொறுப்புமிக்க செயல்திறன் ஜனநாயக நாட்டில் அமைந்துவிடுதல் வேண்டும் என்பதை எதிர்கால பயணிகள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. எதிர்பார்ப்புக்களை மட்டும் நிர்க்கதியாக்கிவிடாத எதிர்காலம் உருவானால் அதுவே போதும் என தவமிருந்து பெற்றுவிட்டால் வாழ்வின் மைல்கல் இன்பமாயிராது. கொட்டும் பனியிலும் வாட்டும் வெயிலிலும் கருகி கந்தலாகி பிரிந்த வாழ்வில் எதிர்காலம் என்ன சொர்க்கத்திற்கு நிகரா? அப்படியே அமைந்தாலும் வாழ்வின் வசந்தத்தை அள்ளி வீசுமா? வாழ்கின்ற காலம் கசப்பாய் அமைந்தபின்னர் சொர்க்கத்தின் வசதி இன்னோரன்ன ரம்மியங்கள் இனியும் என்னத்திற்கு! துக்கத்திலும் கொடுமை அனுபவித்த எமக்கு இனியென்ன சுகம் வேண்டும் என்பதைக்கூட இரகசியமாய் கேட்பதற்கு காலம் அனுமதிக்கவில்லை என்றால் எனக்குள் மட்டுமா மனசாட்சி வாழ்கிறது என கேட்கத்தான் தோண்றுகிறது.
இடர் பாதை முற்றுப்பெற காலமில்லை. அது இன்னும் மானிடரை தள்ளாடச் செய்கிற வன்மையாளன். கொடுங்கோலன். வையகத்தில் வாழ்வோரை வஞ்சகமாய் வழிகெடுக்கும் நச்சுப்பிராணி. ஆசைகளின் மேல் நப்பாசை வைத்து வாழ்விற்கிருந்த வளையலையும் கழற்றி விற்றும் வீட்டுப்பசி அடங்கவில்லை. உள்ளக் குமுறல்கள் மட்டும் வெளியே கேட்டிருந்தால் மதுரை எரித்த கண்ணகியை நினைவூட்டும் செயலிங்கு நடந்திருக்கும். எப்போதும் காணும் கண்ணாடி நிழலாட்டம் எதிரில் பிரதிபலிக்கின்ற எதிர்காலம் போலாகும். நிலவிற்கு ஒளி தரும் சூரியனிலும் எதிர்காலம் கேள்விக்குறி! வாழ்வில் அர்த்தம் தேடும் மானிடவியலாளர்களுக்கு எதிர்காலம் மறைந்ததுவோ அன்றேல் மறந்து போயிற்றோ!
வேதாகமம் தரும் விடை உன் கேள்விகளுக்கு தக்க பதில். எதிர்காலத்தை அறிந்த தேவன் உன் வாழ்வினை மாற்றிடும் கர்த்தர். வாழ்வில் சுமந்து திரியும் பாரங்களை தா என்று கேட்கிறார். எதிர்காலம் கற்பனையல்லவென்று கரம் நீட்டி அழைக்கின்றார். இன்று பட்ட உபத்திரவங்களால் கலங்குகின்றாயோ எனக் கேட்டு ஆறுதல் செய்பவர் அவர்தானே. உலகம் துன்பப்படுத்தும் என்றே பரலோகத்தை காட்சிப்படுத்தி சென்றார் என்பதினால் நீண்ட துன்பியலை பிரகாசமாய் மாற்றிட ஒருவர் உண்டு என்பதை நிச்சயம் அறிந்து கொள். உன் வாழ்க்கை அவர் கரத்தில் இருந்தால் துக்கங்கள் என்ன ஒரு பொருட்டா? பாவத்திற்கு மன்னிப்பு தருவதும் அதனோடிணைந்த இலவச ஈவெனும் நித்தியஜீவனை அருளுவதும் அவருக்கு விருப்பமன்றோ? பாவத்தினால் மரித்தவர் பரிசுத்தமாய் உயிர்த்தார். மீண்டும் வருவேன் என்று சொன்னார். நிச்சயம் வருவார் எதிர்காலம் இன்றே.




Syndication