நியாயஞ்செய்வதை வேதாகமம் வலியுறுத்துகின்றது. உலகில் மக்கள் தங்கள் மேல் அதிகாரத்தை கொண்டவர்களுக்காக தங்களை நடத்தும் தலைவர்களுக்காக தங்கள் காரியங்களை செய்கின்றார்கள். தலவர்கள் எவ்வித பாதையை தீர்மானிக்கின்றார்களோ அப்பாதை மக்களது ஜீவனோபாயமாகின்றது. அவ்வித மக்களின் துயரங்களையும் துக்கங்களையும் கவனிக்கத்தக்க சிறந்த தலைமைத்துவ சக்திகள் உலக அரங்கில் இருந்து நீங்கப்பெற்றுள்ளதை கண்கூடாகப் பார்க்க முடியும். மக்கள் தம் வாழ்வில் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு பதிலளிக்கும் விதத்திலான செயற்பாடுகள் அதிகமாக இலங்கை சமுதாயத்தில் காண்பது அரிதாக உள்ளது. மக்களின் எதிர்கால நோக்கை தீர்மானிக்கும் சக்திகள் மக்களை மேல்நோக்கி வரவிடாமல் இன்னுமாக அவர்களை மிதித்து செல்கின்றது. அதிலும் ஆதிக்க வெறிக்கொண்ட தலைவர்களுக்கு மக்கள் பகடைக்காய்களாக ஆக்கப்படுவதோடு தம் சகோதர இனத்தாருக்கு தம் ஆதிக்க வெறியை வெளிப்படுத்தும் வண்ணமாக மக்கள் கூட்டம் இருந்து கொண்டிருப்பது விரும்பத்;தகாகது. எவ்வாறாயினும் மக்கள் தாம் மிதிக்கப்பட்டு செல்வதை அறிந்தும் தலைவர்களின் பகடைகளாக ஏனையோருக்கு பங்கம் விளைவிக்க தயங்காது செல்கின்றனர். மீளமுடியாதவர்களாய் இருந்து கொண்டு ஆதிக்க வெறிக்காய் ஆர்ப்பரிக்கும் போது நடப்பது எதுவுமில்லை. வீணான செயலுக்காய் ஆர்ப்பரிக்கும் மடைமைகளாக ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கு இனியும் ஆதிக்கவெறியின் பயனற்ற தன்மை தெளிவாய் விளங்கும் என்பதனை கண்டறிவதற்கு நீண்ட காலங்கள் செல்லலாம். ஆதிக்கத்தின் மேலாக கட்டபட்டவர்க்கு பொருளாதாரம் தாழ்ந்தாலென்ன, விழுந்தாலென்ன தாம் ஆதிக்கத்தை நிலைநாட்டமுடியும் என்னும் நப்பாசை இன்னும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்றால் மிகையில்லை. உலகம் பொருளாதாரத்தில் ஆட்டம் காணும் இந்நேரத்தில் உலகில் வருமானத்தை பெற்றுக்கொள்ள இடம்பெயர் அகதிகளை காட்டி வருமானம் பெற்றுக்கொண்டிருக்கின்றது இலங்கை. அகதிகளாக்கப்பட்ட மக்களிற்கு உரியவை செல்கின்றதா என்பதை குறித்த செய்திகளை பத்திரிகைகள் வெளியிடவுமில்லை. அவை பகிர்ந்தளிக்கப்படுவதாக காண்பிக்கப்படவுமில்லை. ஆக மொத்தத்தில் இலங்கையின் செயற்பாடுகள் மக்களுக்காகவன்றி ஆதிக்கவெறிக்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. “ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற. உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்;த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்”. நீதிமொழிகள் 31:8,9
18:08:49 . 31 May 2009


Syndication
No Comment for this post yet...